சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வாலிபர் ஒருவருடன் சில நாட்களுக்கு முன்பாக மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர்.
அப்போது சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அவருடைய மனுவில்," 2017 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடும் நிலையில் அப்போதெல்லாம் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனையப்பட்ட வழக்காக உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பது, தலைமறைவாவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிறுமி ஒருவருடன் சென்ற நிலையில், அவரை மீட்டதால், அந்த கோபத்தில் அவ்வாறு குறிப்பிடுவதாகத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது.
சிறுமியின் தாயே அவரது வாழ்க்கையை சிதைத்துள்ளார். ஆகையால் இந்த வழக்கில் விசாரணை முடிந்த பின்னரே, தவறு யார் மீது என தெரியவரும் என தெரிவித்தார்.
அதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.