அமராவதி அணையிலிருந்து பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
“திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் ராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் ராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் ராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் ராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்குப் பாசனத்திற்காக ஆகஸ்டு 26 முதல் டிசம்பர் 24 முடிய 120 நாட்களுக்கு 324 மி.க. அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.