தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவல்:
“தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனைத் தொடர்ந்து வரும் 23, 24, 25 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு
வாடிப்பட்டி (மதுரை) 5 செ.மீ., நத்தம் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி தலா 4.செ.மீ., சாத்தையாறு 3 செ.மீ., மருங்காபுரி (திருச்சி) 2 செ.மீ., மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 1 செ.மீ. பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகள் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.