இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (94), சில நாட்களாக காய்ச்சல், சளி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் நலம் விசாரிப்பு
நல்லகண்ணு தற்போது நலமுடன் இருக்கிறார். கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரில் பார்த்தும் நலம் விசாரிக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி தொலைபெசி மூலம் நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நன்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.