தமிழகம்

வீடுகளில் அதிக மின் கட்டண வசூல் மறு ஆய்வு மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தாழ்வழுத்த மின் கட்டண கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், மின்சார வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மின் கட்டண அளவீடு செய்யப்படாததால், வீடுகள் மற்றும் சிறுவணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதை இரண்டு இரு மாதங்களுக்கு என பிரித்து வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு பதில், மின் பயன்பாட்டு யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, தமிழக அரசின் மின் கணக்கீட்டு நடைமுறையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “இந்திய மின்சார சட்ட விதி 45(3) ல் குறிப்பிட்டபடி மின் உபயோக அளவீட்டுபடியே கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்பட்ட வேண்டும். இப்போது வசூலிக்க பட்ட கட்டணம், உபயோகப்படுத்திய மின் யூனிட்டை விட அதிக யூனிட்டுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

100 யூனிட் தள்ளுபடி என்பது ஏற்கனவே உள்ள விதிகளின் படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்”. என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், மின்சார வாரியத்துக்கும் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT