இந்து தமிழ் இணையதள செய்தி எதிரொலியால் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே, 7 ஆண்டுகளுக்குப் பிறகு குறை மின்னழுத்தப் பிரச்சனை சீரானதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காளையார்கோவில் அருகே சேதாம்பல் ஊராட்சி பொத்தகுடி யில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்துக்கு சிரமம் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அக்கிராமத்துக்கு குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் மோட்டார், கிரைண்டர், மிக்சி போன்ற மின்சாதனப் பொருட் களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு முன்பு, பொத்தகுடியில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் செய்த 2-வது நாளிலேயே மின்மாற்றி அருகேயுள்ள ஒரு மின்கம்பத்தில் தனியார் ஒருவரின் ஜேசிபி இயந்திரம் மோதியது. இதனால் மின்கம்பம் சேதமடைந்தது.
இதையடுத்து மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அறுந்துவிழுந்த மின்கம்பியை அருகேயுள்ள மரத்தில் மின்ஊழியர்கள் கட்டி வைத்தனர். அதன்பிறகு 7 ஆண்டுகளாக சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யவும் இல்லை, மின் இணைப்பும் கொடுக்கவில்லை. இதனால் பொத்தகுடி கிராம மக்கள் தொடர்ந்து குறை மின்னழுத்தத்தால் சிரமம் அடைந்து வந்தனர். குருவிக்காக 45 நாட்கள் தெருவிளக்குகளை எரிய விடாமல் இருளில் தவித்த பொத்தகுடி கிராம மக்களை மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாதது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்து தமிழ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக சேதமடைந்த மின்கம்பத்தைச் சரிசெய்து குறை மின்னழுத்தத்தை மின் ஊழியர்கள் சீரமைத்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.