சிதம்பரம் இனிப்பகத்தில் இலவசமாக வழங்கப்படும் நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் மூலிகைப் பானம். பின்புலத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள மூலிகைப் பொருட்கள் குறித்த தகவல் பலகை. 
தமிழகம்

கரோனாவை எதிர்கொள்ள 5 மாதங்களாக இலவசமாக மூலிகை பானம் விநியோகம்: சிதம்பரத்தில் தொடரும் இனிப்பக உரிமையாளரின் சேவை

க.ரமேஷ்

சிதம்பரம் தெற்கு வீதியில் இனிப்பகம் நடத்தி வருபவர் கணேஷ். இவர், கடந்த 5 மாதங்களாக கரோனா தொற்று முன் தடுப்பு நடவடிக்கையாக மூலிகை பானம் ஒன்றை தயாரித்து, தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகிறார்.

சுக்கு, ஏலக்காய், வெற்றிலை, மிளகு, கிராம்பு, துளசி, மல்லி, திப்பிலி, கற்பூரவல்லி, பனை வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகம் ஆகிய பொருட்களை உள்ளடக்கிய இந்த பானத்தை நாள்தோறும் வாடிக்கையாளர்கள் அருந்தி செல்கின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் கணேஷிடம் கேட்ட போது, “ கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் நாம் அனைவரும் திணறி வருகிறோம். ‘நமது உணவு பழக்க வழக்கமே உரிய நோய் எதிர்ப்பாற்றலைத் தரும்’ என்பதை பாரம்பரிய மருத்துவம் இந்த நெருக்கடி தருணத்தில் நமக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த அசாதாரண நிலையில் இப்படி வழங்குவது, எங்களுக்கு மனதிருப்தியை அளிக்கிறது” என்கிறார்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக இந்த இனிப்பகத்தில், 300க்கும் மேற்பட்டோர் இந்த மூலிகைப் பானத்தை இலவசமாக அருந்திச் செல்கின்றனர். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வோருக்கே, இந்த பானத்தை தருகின்றனர். அதற்காக நீரும், கிருமி நாசினியும் இனிப்பகத்தில் வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT