தமிழகம்

தென்னிந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கரோனா பாதுகாப்பு, சுகாதார தரச்சான்றிதழ்

ரெ.ஜாய்சன்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தென்னிந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் 'பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு' தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் அலுவலர்கள், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு வரும் வழியில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சோப்பு மூலம் கை கழுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அலுவலக வாசலில், அலுவலகத்துக்கு வரும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

உள்ளே வரும் அலுவலர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கணிணியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கி வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு உடல் வெப்பம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பார்வையாளர்களுக்கான இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ள் ஒட்டப்பட்டுள்ளன.

இவைகளை இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனம் கரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இவ்வழிமுறைகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மதிப்பீட்டாளர் பார்வையிட்டு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் தென்னிந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறையின் மூலம் செயல்படுத்தபட்டுள்ள பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு சான்றிதழ் (WASH) இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் வழங்கினார். தென்னிந்தியாவிலேயே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் இச்சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT