இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 74-வது சுதந்திரதின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் பழனிசாமியின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேசத் தந்தை மகாத்மா காந்தி காட்டியஅகிம்சை வழியில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் தாய்நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்திட தங்கள் இன்னுயிரை நீத்த பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தைப் போற்றும் நன்னாளாக இந்த சுதந்திர தினம் விளங்குகிறது.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையில், தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.15ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாகவும், அவர்கள் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.7,500-ல் இருந்து 8 ஆயிரமாகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்கியது. தியாகிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல திட்டங்களை அரசுசெயல்படுத்தி வருகிறது.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும்வகையிலும் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவுத் தூண்கள் நிறுவி அவர்களின் பிறந்த தினத்தில் தமிழகஅரசின் சார்பில் விழாக்கள் நடத்தி அவர்கள் புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட சீரிய தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து, வீடு திரும்புவோர் சதவீதமும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு சதவீதம், உலகிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவாக உள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நெருக்கடியான காலத்திலும் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல்வேறு முனைப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் ஒத்துழைப்புடன் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு, மீண்டும் வெற்றிநடை போடும் என்பதில் ஐயமில்லை.
நமது நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்தவும் தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கச் செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.