தமிழகத்தில் அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கக் கோரி, வரும் 25-ம் தேதி பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நீண்ட நாட்களாக பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
இதற்கிடையே, அரசு பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் இயக்கலாம் என்ற தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழகத்தில் உடனடியாக பேருந்து சேவையை தொடங்கக் கோரியும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள புதிய அரசாணையை திரும்ப பெறக் கோரியும் வரும் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.