கரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய 27 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் முன்களப்பணியாளர்களாக பணியாற்றியதற்காக பதக்கம்மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமிஅறிவித்திருந்தார்.
அதன்படி, கரோனா முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய 27 பேருக்கு சுதந்திர தினத்தன்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
இதுகுறித்து வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறையில், மருத்துவர்கள் ராஜேந்திரன், உமாமகேஷ்வரி, ஆ.சதீஷ்குமார் (சித்தா), செவிலியர்கள் என்.ராமுத்தாய், கிரேஸ் எமையா, செவிலியர் கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி, மாநில சுகாதார ஆய்வக துணை இயக்குநர் எஸ்.ராஜூ, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வக நுட்புநர் ஜீவராஜ் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
காவல், நகராட்சித் துறை
காவல்துறையில், ஆய்வாளர் இ.ராஜேஷ்வரி, உதவி ஆய்வாளர் டி.நரசிம்மஜோதி, காவலர் சையித் அபுதாகிர், தீயணைப்புத் துறையில், ஐ.துரைராபின், ச.பழனிசாமி, எஸ்.கருணாநிதி ஆகியோர் பதக்கம், சான்றிதழ் பெறுகின்றனர்.
நகராட்சி நிர்வாகத் துறையில், துப்புரவு ஆய்வாளர்கள் எஸ்.ரகுபதி, பி.பாண்டிச்செல்வம், உதவி பொறியாளர் எஸ்.கலையரசன், தூய்மை பணியாளர்கள் எம்.ஏசுதாஸ், ஈ.ஜெய்சங்கர், மா.சங்கர் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
வருவாய், உணவுத் துறை
வருவாய்த் துறையில் வட்டாட்சியர் எஸ்.ஜெயசித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் கே.ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் து.பிரித்விராஜ், கூட்டுறவு மற்றும் உணவுத் துறையில், பட்டியல் எழுத்தர் ஆர்.தியாகமூர்த்தி, விற்பனையாளர்கள் பி.ரமாமணி, டி.தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.