தமிழகம்

திருச்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கோரும் வழக்கு: ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொலியில் ஆஜராக உத்தரவு

கி.மகாராஜன்

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 2 வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கக்கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொலி வழியாக ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி இந்திரா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. கரோனா பரிசோதனை கருவிகள் போதுமான அளவு இல்லை. மருத்துவர்கள், ஆய்வகங்களில் பணிபுரிவோர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை.

திருச்சியில் கரோனா பரவல் சமூக தொற்றாக மாறவிடாமல் தடுக்க 2 வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரோனா சிறப்பு அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

எனவே திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை முறையாக கண்காணித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் தேவையான கரோனா பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்யவும், திருச்சி மாவட்டம் முழுவதும் 2 வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா பரிசோதனை முடிவுகளை வழங்க கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? முன்களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளதா?

திருச்சி மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? கரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் , திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும், இருவரும் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27-ல் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT