புதுக்கோட்டை ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவத சுவாமியின் புதல்வர் ஸ்ரீ ஸஞ்சீவி பாகவத சுவாமிகளின் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.
கலியுகத்தில் மனிதன் உய்வடைவதற்கு உகந்த மார்க்கம் நாமசங்கீர்த்தனம் என்பதை முதலில் எடுத்துரைத்தவர் நாரத மகரிஷி. அவரது வழியில், புதுக்கோட்டை அப்பா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவத சுவாமி, நாமசங்கீர்த்தனத்தை, வாழ்வதற்கு பொருள் ஈட்டுவதற்காகவோ, பிறர் பாராட்டுவதற்காகவோ செய்யாமல் தனது முழுமூச்சாகவே ஏற்று செயல்பட்டவர்.
அவரது மகனாக ஸ்ரீ ஸஞ்சீவி பாகவத சுவாமிகள், 1920-ம் ஆண்டு ஆக. 17-ம் தேதி அவதரித்தார். நல்ல சங்கீத ஞானம் பெற்ற இவர், தனது தந்தையிடம் நாமசங்கீர்த்தனத்தை முறையாகப் பயின்றார். நாமசங்கீர்த்தனத்தை, பாரத தேசம் முழுவதும் சென்று பரப்பி வந்தார். தந்தை வழியில் புதுக்கோட்டையில் 1971 (தந்தை மறைவு) முதல் 2001-ம் ஆண்டு (இவரது மறைவு) வரை ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ நரசிம்ம உற்சவத்தை சிறப்பாக செய்து வந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தார். இவரது மறைவுக்குப் பின்னர் இவரது குடும்பத்தினர் மற்றும் சீடர்களால் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இம்மகானின் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.