தமிழகம்

ராணுவவீரர் மனைவி, தாயார் கொலை வழக்கை விசாரணை செய்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மாற்றம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவவீரர் மனைவி, தாயாரை கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைதாகாத நிலையில், அவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவவீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரியை கொலை செய்துவிட்டு 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

மேலும் வழக்கை விசாரிக்க மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் இளவரசும் இருந்தார்.

கொலை நடந்து ஒரு மாதம் ஆனநிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதனால் போலீஸாரை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திடீரென மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதைதொடர்ந்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் இளவரசும் சிவகங்கை தாலுகாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டராக சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT