தமிழகம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழைக்கும், பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு:

பந்தலூர் (நீலகிரி)11 செ.மீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) 9 செ.மீ., தேவாலா (நீலகிரி) பிரேயர் எஸ்டேட் (நீலகிரி) தலா 8 செ.மீ., சின்னகல்லார் (கோவை) அரிமலம் (புதுக்கோட்டை) அவலாஞ்சி (நீலகிரி) தலா 7 செ.மீ., வால்பாறை (கோவை) சின்கோனா (கோவை) தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்ட் 12 முதல் 14 வரையிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில், பலத்த காற்று 45 லிருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15 வரை மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 16 வரை மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 12 முதல் 16 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் அலை 2.5 முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT