தமிழகம்

கரோனாவில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய 38 போலீஸார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய காவல் துறையினர் 38 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை பாதுகாக்கும் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

காவல்துறையினரும் கரோனா பிடியில் இருந்து தப்பிவில்லை. நாடு முழுவதும் ஏராளமான காவல்துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று, மீண்டும் பணிக்கு திரும்பி களப்பாணியாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் காவல் துறையினர் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஏரல் காவல் ஆய்வாளர் பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் லட்சுமி பிரபா, ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் சொர்ணராணி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் மயிலேறும் பெருமாள் உள்ளிட்ட 38 பேர் கரோனாவில் இருந்து மீண்டு முழுமையாகக் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. அவர்களுக்கு பழக்கூடைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி எஸ்பி ஜெயக்குமார் வாழ்த்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது: கரோனா தொற்று மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். அப்பணியில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள்.

சவாலான பணியை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் நீங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது என்றார் எஸ்பி. அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT