மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் ஷசாங் சாய் உட்பட 32 போலீஸார், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்றுபணிக்குத் திரும்பினர். அவர்களை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘கரோனா தொற்றால் தற்போது வரை சென்னையில் 1,870 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,468 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டனர். பணிக்குத் திரும்பிய போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அதே வேகத்தில் பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய ஆயுதப்படை காவலர்கள் பொது மக்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.
துணை ஆணையர் ஷசாங் சாய் கூறும்போது, ‘‘காவல் ஆணையர் உட்பட போலீஸ் அதிகாரிகள் என்னை போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசினர். தன்னம்பிக்கை அளித்தனர். அவர்கள் அளித்த ஊக்கம் மற்றும் ஆதரவால் கரோனாவில் இருந்து விரைவில் குணமடைய முடிந்தது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் அமல்ராஜ் (தலைமையிடம்), ஆர்.தினகரன் (தெற்கு), என்.கண்ணன்(போக்குவரத்து), பி.சி.தேன்மொழி (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையர்கள் ஆர்.சுதாகர் (கிழக்கு), சி.மகேஷ்வரி (மேற்கு) வி.பாலகிருஷ்ணன் (வடக்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.