தமிழகம்

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா?- கனிமொழி எம்.பி. கேள்வி

செய்திப்பிரிவு

இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போதிருந்து உருவானது? என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக, திமுக குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.

அப்போது, கனிமொழியிடம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் ஒருவர், "நீங்கள் இந்தியரா?” என்று கேட்டது சர்ச்சையாகியுள்ளது.

இதுதொடர்பாக கனிமொழி நேற்று ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "விமான நிலையத்தில் இன்று சிஐஎஸ்எஃப் காவலரிடம், ‘எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீங்கள் இந்தியரா?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.

இந்தி மொழி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போது உருவானது என்பதை அறிய விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிஐஎஸ்எஃப் விளக்கம்

இதற்கிடையே, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள சிஐஎஸ்எஃப் நிர்வாகம் “இந்த மொழியில்தான் பேச வேண்டும் என்று சிஐஎஸ்எஃப்-க்கு எந்தக் கொள்கையும் இல்லை. கனிமொழியின் புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

இதற்கு கனிமொழி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT