முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

மூணாறு நிலச்சரிவு: கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி; தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி

செய்திப்பிரிவு

மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

கேரள மாநிலம் இடுக்கியில் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் கனமழை காரணமாக நேற்று முன் தினம் (ஆக.7) அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தமிழகத் தொழிலாளர்கள் பலர் மாயமாகினர். 80 பேருக்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாக இன்றும் (ஆக.9) தொடர்கிறது.

இந்நிலையில், மூணாறு நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று (ஆக.9) தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், "மூணாறில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். இது தொடர்பாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT