தமிழகம்

தனியார் நிகழ்ச்சிகளில் கரோனா தடுப்பு முறைகளை அமைச்சர்கள் பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஅமைச்சர்கள் பின்பற்ற வேண்டும்என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், ‘‘முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் போன்றோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி, தனி மனிதஇடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது இல்லை. எனவே, அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது, அரசு தலைமைவழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘முதல்வர் உள்ளிட்டஅமைச்சர்கள் தங்கள் கடமைகளை செய்து வருகின்றனர். மனுதாரர் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு விழாக்களில் பங்கேற்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அதேநேரம், அமைச்சர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது உரிய கரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்’’ என்று அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT