திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயத்தை மேலும் உயர்த்த, குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த கொண்டுவரப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிபணிகள் குறித்து ஆய்வு செய்ய நாளை (ஆக.,6) வியாழக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் வருகை தருகிறார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள், விவசாயிகள், சிறுகுறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.
விவசாயம் சிறக்க நதிநீர் இணைப்புத் திட்டம்:
திண்டுக்கல் மாவட்டம் முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். காய்கறிகள், பூ, நெல், கரும்பு, மலைப்பயிர்கள் என அனைத்துவிதமாக பயிர்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் பெரிய மார்க்கெட்களில் ஒன்றாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் இருப்பதற்கு மாவட்டத்தில் விளையும் அதிக காய்கறிகள் தான் காரணம்.
முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள நிலையில் பயிர்களைக் காக்க நீர்த் தேவை அதிகளவில் உள்ளது. மேலும் கோடைகாலத்தில் குடிநீர் தேவைக்கு ஒவ்வோர் ஆண்டும் நகரம் முதல் கிராமப்புற மக்கள் வரை சிரமப்படுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் வறட்சிக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முயற்சிமேற்கொண்டது.
இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அமராவதி ஆற்றில் இருந்து காவிரி ஆற்றில் கலக்கின்ற உபரிநீரும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் உள்ள பாலாறு பொருந்தலாறு, வரதமாநதியிலிருந்து சண்முகநதி வழியாக அமராவதி ஆற்றில் கலக்கின்ற உபரிநீரும், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நல்லதங்காள், நங்காஞ்சியாறு ஆகிய ஆறுகளிலில் இருந்து செல்லும் நீரும், திண்டுக்கல் அருகேயுள்ள குடனாற்றில் செல்லும் நீரும் அமராவதி ஆற்றில் கலந்து காவிரி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது.
அமராவதி ஆறு, சண்முகாநதி, நங்காஞ்சியாறு, குடகனாறு ஆகியவற்றை இணைத்து உபரிநீரை சேமிக்கும் திட்டத்திற்காக கடந்த 2018 ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு முதற்கட்டமாக ஆய்வுப்பணிக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (திட்டம் மற்றும் வடிமைப்பு) மதுரை, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி காவிரி ஆற்றில் கலக்கும் ஆறுகளை ஒன்றிணைக்க ரூ.700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்தார். திட்ட அறிக்கை தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பயன்பெறும்:
பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படடி நதிநீர் இணைப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழநி, ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை. குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசனவசதிபெறும். மேலும் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும். வறட்சியை முற்றிலும் போக்கலாம்.
இதனால் ஆரம்ப கட்ட பணிகளை உடனே தொடங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நிதி அதிகம் தேவைப்படுவதால் மத்திய அரசின் நிதியை கேட்டுப்பெற்றாவது இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த ஒரு திட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றினாலே மாவட்டம் முழு வளர்ச்சி பெறும், விவசாயம், குடிநீர், நிலத்தடிநீர் மட்டம் உயர்வு, பயிரிடும் பரப்பு அதிகரிப்பு, இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு என பல நன்மைகள் பயக்கும் இந்ததிட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் முனைப்புடன் செயல்படவேண்டும் என்பதே திண்டுக்கல் மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.