பூந்தமல்லி பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டி உணவு வழங்கும் அரசுப் பேருந்து நடத்துநர். 
தமிழகம்

சாலையோர ஆதரவற்ற முதியோருக்கு முடிதிருத்தம் செய்யும் அரசு பேருந்து நடத்துநர்

கி.ஜெயப்பிரகாஷ்

சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியோருக்கு முடிதிருத்தம் செய்து, உணவுகளை வழங்கி வரும் அரசு பேருந்து நடத்துநருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கரோனா ஊரடங்கால் மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர மக்களைதேடிச் சென்று உதவிகளை செய்து வருகிறார் அரசு பேருந்து நடத்துநர்.

பூந்தமல்லியை சேர்ந்தவரான பாபு (40), சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வீடுகளின்றி சாலையோரமாக வசித்துவரும் ஆதரவற்ற முதியோருக்கு முடிதிருத்தம் செய்து, அவர்களைக் குளிப்பாட்டி உணவுகளை வழங்கி வருகிறார் பாபு.

இதுதொடர்பாக பாபு கூறியதாவது: பசியின் கொடுமைஎனக்கு நன்றாகத் தெரியும்தற்போது எனக்கு பணி இல்லாததால், இந்த கரோனா ஊரடங்கில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

குறிப்பாக, சாலையோரங்களில் வசிக்கும் முதியோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது, முடிதிருத்தம் செய்வது போன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனக்கு கிடைக்கும் மாதச் சம்பளத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவு செய்கிறேன்.

தினமும் 150-க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறேன்.

கடந்த 25 நாட்களாக இந்தபணியை மேற்கொண்டு வருகிறேன். தாய், தந்தையை இழந்த எனக்கு இதுபோன்ற சேவைசெய்வது திருப்தியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT