தமிழகம்

நாளை மதுரை வருகிறார் தமிழக முதல்வர்: கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழக முதல்வர் கே.பழனிசாமி நாளை 6-ம் தேதி மதியம் மதுரைக்கு வருகிறார். கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி, நாளை 6-ம் தேதி காலை திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகிறார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதற்காக அவர் சேலத்தில் இருந்து திண்டுக்கல் வருகிறார். திண்டுக்கல்லில் காலை நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு மதியம் மதுரை மாவட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி வருகிறார்.

அவருக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆ .பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்கிறார்.

அதன்பிறகு மதுரை அருகே வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிடுகிறார்.

அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் அவர், கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து அமைச்சர்ககள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ-க்கள் விவி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட மதுரை மாவட்ட எம்எல்ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பயனாளிகளுக்கு பல்வறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இரவில் மதுரையில் தங்கும் அவர் மறுநாள் 7-ம் தேதி திருநெல்வேலி புறப்பட்டுச் செல்கிறார்.

SCROLL FOR NEXT