தமிழகம்

குமரி மேற்கு கடல் பகுதியில் தடைகாலத்திற்கு பின்பு கரைதிரும்பிய விசைப்படகுகளில் நல்ல மீன்பாடு: விடிய விடிய களைகட்டியது மீன் ஏலக்கூடங்கள்

எல்.மோகன்

கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதியில் தடை காலத்திற்கு பின்பு கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரைதிரும்பி வருவதால் நல்ல மீன்பாடு உள்ளது. குளச்சல் உட்பட மீன்பிடி துறைமுகங்களில் ஏலக்கூடங்களில் இரவு நேரத்தில் விடிய விடிய மீன் விற்பனை நடந்தது.

தமிழகத்தில் அரபி கடலுக்குட்பட்ட மேற்கு கடல் பகுதியில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் கடந்த ஜீலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 1ம் தேதி அதிகாலையில் இருந்து மீண்டும் விசைப்படகுகளில் மீன்பிடி பணியை தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மணக்குடியில் இருந்து கேரள எல்லை பகுதியான நீரோடி வரை விசைப்படகுகள் மீன்பிடி பணியில் ஈடுபட்டன.

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முதல் கட்டமாக ஆழ்கடலுக்கு சென்றன.

ஊரடங்கால் மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கட்டிகள் தட்டுபபாடு ஏற்பட்டது. இதனால் மேலும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்றிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் இரவில் கரைதிரும்பின.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கரைதிரும்பியதுமே மீன்பிடி தளங்கள் களைகட்டி பரபரப்பாக காணப்பட்டது. 45 நாட்களுக்கு பின்னர் ஆழ்கடலுக்கு சென்று வந்ததால் அதிக அளவில் மீன்பாடு இருந்தது. கணவாய், கொழிசாளை, கிளி மீன், நாக்காண்டம், நவரை மீன்கள் அதிகமாக கிடைத்திருந்தது. ஊரடங்கால் துறைமுகங்களில் பகலில் மீன் ஏலத்திற்கு அனுமதி இல்லை. இதனால் குளச்சல் துறைமுகத்தில் மீன்ஏல கூடத்தில் இரவில் இருந்து நேற்று காலை வரை விடிய விடிய மீன்கள் ஏலம் நடந்தது.

கொழிசாளை 50 கிலோ 2 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனை ஆனது. கிளி மீன்கள் 2500, நாக்காண்டம் 1200, கணவாய் 3000 என ஏலம் போனது. தடைகாலத்திற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT