பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? என சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பேரறிவாளனுக்குப் பரோல் வழங்குவது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறைத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், “பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அவரைச் சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. பேறிவாளன் 2019-ல்தான் பரோலில் சென்று வந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறைச் செயலாளர்தான் முடிவெடுக்க வேண்டும்” என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜீவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்குக் காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில்தான் உள்ளதா? எனச் சந்தேகம் எழுப்பி, தற்போதைய விசாரணை நிலவரம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சிறைத்துறை தரப்பு, விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது.
பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா? எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, கடந்த 2017 மற்றம் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்குப் பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.