தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கையொட்டி சென்னை முழுவதும் 193 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் நேற்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்த விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தேவையின்றி வீட்டைவிட்டுவெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கேட்டுக் கொண்டிருந்தார்.
தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதற்காக சென்னை முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும், ரோந்து வாகனம் மூலம் முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருக்களையும் போலீஸார் கண்காணித்தனர்.