தமிழகம்

பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா மாறும் திட்டத்தைக் கண்டித்து ஆக.3-ல் விஏஓ.,க்கள் மவுனப் போராட்டம்

இ.ஜெகநாதன்

‘‘பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா மாறுதல் திட்டத்தைக் கண்டித்து ஆக.3-ல் மவுன போராட்டம் நடத்தப்படும்,’’ என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கா.செல்வன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது: பதிவுத்துறையில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றும் முறையை அரசு செயல்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உண்டாகும் என்பதை அறிந்தும், இந்த திட்டத்தை செயல்படுத்தியது வியப்பையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

ஏற்கெனவே இதுகுறித்து அரசிடம் தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல், விஏஓ-களில் அதிகாரத்தையும், பொறுப்பையும் பறித்து வேறு துறைக்கு கொடுக்கும் விதமாக உள்ளது.

இதையடுத்து இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக ஆக.3-ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மவுனப் போராட்டம் செய்ய உள்ளளோம்.

உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்களில் இனி வருங்காலங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழுகோப்புகள் தயார் செய்யலாம் எனவும், அதற்காக விஏஓ-க்கு நில அளவை பயிற்சி (புத்தாக்கம்) அளிக்கப்படும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதனை விரைவில் செயல்படுத்துவதோடு, உட்பிரிவு பட்டா மாறுதல் இனங்கள் விஏஓ-களுக்கு வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றி இறந்த விஏஓகளுக்கு அரசாணைப்படி, ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி நகர கணக்குகளை விஏஓ-களிடம் நில அளவைத்துறையினர் இதுவரை ஒப்படைக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. இந்த கணக்கு இல்லாததால் நகர பகுதிகளில் விஏஓக்கள் பணியாற்ற முடியவில்லை.

நிலவரி வசூலிக்க முடியவில்லை. இதனால் நகர கணக்குகளை விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT