தமிழகம்

மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் நீட்டிப்பு; பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில், மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் திமுக எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும். மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் முடிவதால், காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எனது உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் திமுக எதிர்க்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT