தமிழகம்

குமரிக் கடலில் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

குமரிக் கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் மத்திய உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 5 மீனவர்கள் ஜூலை 24-ம் தேதி காலை 4 மணிக்கு ஆம் தேதி காலை 4 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் மாலை 5 மணி அளவில் துறைமுகத்துக்கு திரும்பிய போது 5 பேரும் மிகப்பெரிய அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் ஷிபு என்ற மீனவர் மாயமானார். முதல் நாளில் மற்றொரு மீனவர்கள் இதே கடல் பகுதியில் மாயமானார்.

இவர்களை விமான படைப்படை, கடற்படையைப் பயன்படுத்தி மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாயமான மீனவர்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர், மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர், கடற்படை வீரர்கள், நீச்சல் வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கடலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் யாருடையது என்பதை மாயமான இரு மீனவர்களின் குடும்பத்தினரும் அடையாளம் காட்டவில்லை. இதனால் அந்த உடல் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மத்திய உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT