தமிழகம்

சமூக இடைவெளியை மீறினால் நடவடிக்கை: மதுரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

கி.மகாராஜன்

சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பயணிகளை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

கரோனா நோய் பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், மேக்ஸி கேப் உள்ளிட்ட போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அதிகபட்சம் இரு பயணிகளுடன் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிகளவு பயணிகளை ஏற்றி இறக்குவதாக புகார்கள் வந்தன. இது கரோனா நோய்த் தொற்று மேலும் பரவுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றிச்செல்வதை தடுக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் கடந்த 3 நாளில் நடத்தப்பட்ட சிறப்பு தணிக்கையில் 118 ஆட்டோக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆட்களை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதமாக ரூ.78800 விதிக்கப்பட்டது.

10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ஆட்டோ ஓட்டுனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT