ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முக்கியமான செயல்பாடுகளுக்குத் தடை இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தளர்வு அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“ தமிழகத்தில் ஆகஸ்டு 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை தொடரும்.
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
* வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்).
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
தொற்றின் தன்மைக்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்படும் செயல்பாடுகள்:
* மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.
மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும்“.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.