தமிழகம்

தூத்துக்குடியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: மாவட்டத்தில் மேலும் 316 பேருக்கு தொற்று உறுதி

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 316 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,591 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் கரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரம் சிகிச்சைக்கு பின் குணமடைந்து கடந்த 26-ம் தேதி வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில் 27-ம் தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரை சேர்ந்த 73 வயது முதியவர், ஆறுமுகநேரியை சேர்ந்த 60 வயது பெண், நாசரேத்தை சேர்ந்த 49 வயது பெண் ஆகியோரும் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர்.

மேலும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த 51 வயது ஆண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

இதன் மூலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 4,124 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,426 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT