கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்கள் 70 மடங்கு வரை உயர்வு; மார்க்சிஸ்ட் கண்டனம்

செய்திப்பிரிவு

நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான அபரிமிதமான கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய்த் தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் இழந்து சொல்லொணாத் துயரங்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு முதல் 70 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாகப்பிரிவினை, நில எல்லை தொடர்பான தகராறுகள், சட்டப்படி தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான அபரிமிதமான கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT