தமிழகம்

தென்காசி விவசாயி சம்பவத்தில் வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்க: முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வலியுறுத்தல்

த.அசோக் குமார்

விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக உரிய நீதி வழங்க வேண்டும். மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வலியுறுத்தியுள்ளார்.

வனத்துறை விசாரணையில் உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து (65).

இவரது விவசாய நிலத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், கடையம் வனத்துறையினர் கடந்த 22-ம் தேதி இரவு அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அணைக்கரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அணைக்கரை முத்துவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து அணைக்கரை முத்துவின் மகன் நடராஜன் அளித்த புகாரின்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடந்த 23-ம் தேதி முதல் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிவாரணம், வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இருப்பினும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால் அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர் சமாதானம் அடையவில்லை. இன்று 6-வது நாளாக உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால், அணைக்கரை முத்துவின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், இன்று வாகைகுளத்துக்குச் சென்று, அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “விவசாயி அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக உரிய நீதி வழங்க வேண்டும். மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT