மதுரை அருகே கால்நடை மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் கால்நடை மருந்தக மருத்துவமனை செயல்படுகிறது. காலை வழக்கம் போல கால்நடை உதவி மருத்துவர் மற்றும் உதவியாளர் பணிக்கு வந்தபோது, மருத்துவமனையின் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தபோது மருத்துவர், மற்ற பணியாளர்கள் பணியில் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து மாடுகளை சிகிச்சைக்கு அழைத்து வந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
அதிகாரிகளிடமும், ஊராட்சி அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. நல்லவேளை யாரும் அருகே இல்லாத காரணத்தால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றனர்.