உள்படம்: காவலர் முருகன் 
தமிழகம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முருகன், முத்துராஜுக்கு கரோனா 

என்.சன்னாசி

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான காவலர்கள் முருகன், முத்துராஜுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31). ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. வழக்கு தற்போது சிபிஐ வசம் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதியானது. அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரை சிபிஐ அலுவலக அதிகாரிக்கும் கரோனா தொற்று உறுதியானது. அதிகாரிகள் 6 பேருக்கு கரோனா உறுதியானதால் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், வழக்கில் தொடர்புடைய காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கழுத்துவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT