தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் 1ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனாஸ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் குறிப்பாக பொதுப்பணியில் ஈடுபடும் காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி சந்தை வியாபாரிகளைப் பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வட்டாச்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் முருகன் தலைமையில் கரேனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த வாரம் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து வியாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட்டத்திலுள்ள 28 கிராமங்கள் உட்பட தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தபடுவதாக முடிவெடுக்கப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அதை எடுத்து இன்று முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதன. மேலும் பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். போக்குவரத்து இல்லாததால் சாலைகளும், கடை வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

SCROLL FOR NEXT