புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றமா என்ற கேள்விக்கு கிரண்பேடி பதில் தந்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்தது. அப்போது, துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் தொடக்கம் முதல் இதுவரை மோதல் தொடர்கிறது. அவ்வப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றம் என்ற தகவல் பரவும்.
இச்சூழலில், தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பாஜக தலைவரும் எம்.பி.யுமான இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின.
இதுதொடர்பாக, இல கணேசன் தனது முகநூல் பக்கத்தில், "எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. உறுதியான செய்தி வந்தால் உடன் பதிவு செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 25) காலை கிரண்பேடி மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவின. அதுதொடர்பாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வாட்ஸ் அப்பில் கேட்டதற்கு, "கடவுளுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்" என்று பதிலளித்துள்ளார்.