பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் காய்ச்சல் முகாம்களை நடத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலர் கே.சண்முகம், சென்னை தவிர இதர மாவட்டங்களின் ஆட்சியர்கள், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளுடன் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடத்தப்பட்டதைப்போல் காய்ச்சல் முகாம்களை நடத்தி இணை நோய்கள் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி இறப்பை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்டங்களில் அவசியம் இருப்பின் முழு ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து அரசுக்கு தகவல் தெரிவித்து அமல்படுத்தலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.