கோவை மாவட்டத்தில் இன்று (25-ம் தேதி) மாலை 5 மணி முதல் வரும் 27-ம் தேதி காலை 6 மணி வரை எவ்விதமான தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், இன்று மாலை 5 மணி முதல், வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவம், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
ஊரடங்கை மீறி, வெளியில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர்சந்தை, மார்க்கெட், மளிகைக் கடைகள், மீன் மார்க்கெட், பூமார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.