அமிர்த விஜயகுமார் 
தமிழகம்

வேதரத்தினத்தைத் தொடர்ந்து விஜயகுமார்: பாஜகவிலிருந்து திமுகவில் மீண்டும் ஐக்கியம்

கரு.முத்து

பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே.வேதரத்தினம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திமுகவுக்குத் திரும்பிய நிலையில், நாகை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் அமிர்த விஜயகுமார் இன்று திமுகவில் ஐக்கியமாகிறார்.

நாகை வடக்கு மாவட்டம் திருக்கடையூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரும் முன்பு திமுகவில் இருந்தவர்தான். திமுகவில் இருந்தபோது ஊராட்சி மன்றத் தலைவர், ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்த விஜயகுமார், கடந்த 2011-ல், பாஜகவுக்குத் தடாலடியாக மாறினார்.

பாஜகவில் அவருக்கு பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து நாகை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆகவும் பதவியில் இருந்தவருக்கு, அண்மையில் புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்தின் செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வேதரத்தினத்தைத் தொடர்ந்து அமிர்த விஜயகுமாரும் இன்று திமுகவுக்குத் திரும்புகிறார். இன்று மாலை, நாகை வடக்கு மாவட்டத் திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் முருகன் முன்னிலையில் நடைபெறும் இணைப்பு விழாவில் காணொலிக் காட்சி வழியே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார் அமிர்த விஜயகுமார்.

நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளரான கவுதமன், திமுகவை விட்டுப் பிரிந்து சென்ற வேதரத்தினத்தை மீண்டும் கொண்டு வந்தார். அதே போல் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன், தனது பங்காக விஜயகுமாரை மீண்டும் திமுகவுக்கு ஈர்த்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT