சாத்தான்குளம் சம்பவத்தில் காவலில் எடுக்கப்பட்டுள்ள மேலும் 3 காவலர்களிடமும் சிபிஐ தனித்தனியே வாக்குமூலம் பெற்றது.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது. இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.
தொடர்ந்து அவர்களை சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்து, வாக்குமூலம் வாங்கினர்.
மேலும், இந்த வழக்கில் கைதான தலைமைக் காவல் சாமத்துரை,முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லத்துரை ஆகியோரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
அவர்களை நேற்று சாத்தான்குளத்திற்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதன்பின் இரவு 3 காவலர்களும் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களிடம் இன்று பகல் முழுவதும் பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் மூவரிடம் வாக்குமூலம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து இன்று மாலை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.