விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனுக்கு கரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன். இவரது மகள் திருமணம் தளவாய்புரத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மனைவி கலாவதி (46), மகன்கள் ராமர் (23), லட்சுமணன் (23) ஆகியோருக்கு கடந்த மாதம் 28ம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மூவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னரும் தொடர்ந்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பொது நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கட்சியினருடன் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராம்கணேஷ் (சிவகாசி) உறுதிப்படுத்தினார்.
எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தவர்கள் உடன் சென்றவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.