காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,820 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையான காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூலை 20) 3,600 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இன்று (ஜூலை 21) காலை 3,820 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 68.67 அடியாகவும், நீர் இருப்பு 31.57 டிஎம்சி ஆகவும் உள்ளது.
தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.