தமிழகம்

சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வெளியே 1 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் 3 காவலர்கள்: சிபிஐ அதிகாரிகள் மட்டும் உள்ளே சென்று விசாரணை

ரெ.ஜாய்சன்

தந்தை, மகன் கொலை வழக்கில் காவலில் எடுக்கப்பட்டுள்ள 3 காவலர்களும் 1 மணி நேரத்துக்கு மேலாக காவல்நிலையம் வெளியே வாகனத்திலேயே காத்திருக்க வைக்ககப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமைக் காவலர் சாமிதுரை, முதல்நிலைக் காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

தலைமைக்காவலர் சாமிதுரை, முதல்நிலைக் காவலர்கள் செல்லத்துறை, வெயில்முத்து ஆகிய மூன்று பேரையும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் மூவரையும் இன்று சாத்தான்குளம் அழைத்து வந்தனர். பகல் 1.30 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையம் வந்தனர். 3 பேரையும் காவல் நிலையத்துக்கு வெளியே வாகனத்திலேயே ஒரு மணி நேரத்துக்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் அமர வைத்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் மட்டும் காவல் நிலையத்துக்குள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 3 பேரையும் காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT