தமிழகம்

வாணியம்பாடியில் இளைஞர் தற்கொலை: கரோனா அச்சத்தால் பெற்றோரை மக்கள் விரட்டியது காரணமா?

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பூபதி(28). இவர், சென்னையில் தனது பெற்றோருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேதாஜி நகரில் உள்ள தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் பூபதி ஈடுபட்டார்.

வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட கடந்த ஏப்ரல் மாதம் பூபதி வாணியம்பாடிக்கு வந்தார். அப்போது, கரோனா தொற்று அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், மீண்டும் சென்னை திரும்ப முடியாமல் அவர் வாணியம்பாடியிலேயே தங்கி கட்டிடப் பணிகளை கவனித்து வந்தார்.

அவரது பெற்றோர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இ-பாஸ் வாங்கிக்கொண்டு மகனைக் காண வாணியம்பாடிக்கு வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து வந்திருப்பதால், கரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவர்களை திரும்பி அனுப்ப வேண்டும் என அக்கம்பக்கத்தினர் பூபதியிடம் வலியுறுத்தினர். இதனால், பூபதியின் பெற்றோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், பூபதி மன வருத்தத்துடன் இருந்தார்.

இந்நிலையில், பூபதியின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாணியம்பாடி நகர போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சென்னையில் இருந்து மகனை பார்க்க வந்த பெற்றோரை அக்கம், பக்கத்தினர் விரட்டியடித்ததால் மனமுடைந்த பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பூபதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT