மதுரையில் முதியவர் தவறவிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ 20 ஆயிரம் பணத்தை தலைமை ஆசிரியர் எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை உரியவரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் கீதாரமணி. 
தமிழகம்

முதியவர் தவறவிட்ட ஆவணங்கள், ரூ.20 ஆயிரம் பணம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த தலைமை ஆசிரியர்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரையில் முதியவர் ஒருவர் தவறவிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் கீதாரமணி உரியவரிடம் ஒப்படைத்தார்.

மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் ஜலீல் வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவர் வைத்திருந்த பை கீழே தவறி விழுந்தது.

அப்பையில், வங்கி பாஸ் புக்குகள் – காசோலை , ஆதார் கார்டு, பான் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் பணம் ரூ,20 ஆயிரம் ஆகியவை இருந்தது.

சற்று தூரம் சென்று பிறகே அவர் தனது பை தொலைந்ததைக் கவனித்தார். தவறவிட்ட பையை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக சென்ற தனக்கன்குளத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, கீழே கிடந்த பையை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணியிடம் ஒப்படைத்தார்.

அப்பையை பிரித்துப் பார்த்தபோது ஆவணங்கள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணமிருப்பதைக் கண்டார். அதிலிருந்த ஆவணங்களிலிருந்த செல்போன் எண் மூலம் ஜலீலை அழைத்து காவல்நிலையத்திற்கு வரவழைத்தார்.

அங்கு தவறவிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் ஒப்படைத்தார். அதனைப்பெற்ற ஜலீல், பணப்பையைக் கண்டெடுத்துக் கொடுத்த தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபுக்கு நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT