பிளஸ் 1, 2 மதிப்பெண் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," 2017-18ஆம் கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
11,12ஆம் வகுப்புகளின் மதிப்பெண்கள் முறையே 600, 600ஆக வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுக்கப்படும் எனவும், தேர்ச்சி மதிப்பெண்ணாக 35-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் சார்ந்த பிரிவுகளில், செய்முறைத் தேர்வுகளில் 75 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளை சேர்த்து மொத்தம் 35 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற செய்முறைத் தேர்வை கொண்ட மாணவர்கள் 21.47% மதிப்பெண்களையும், செய்முறைத் தேர்வல்லாத மாணவர்கள் 27.77 % மதிப்பெண்களையும் பெற வேண்டியுள்ளது. 6.3% மதிப்பெண் வித்தியாசம் உள்ளது.
இதனால் செய்முறை தேர்வற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே, மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50ஐ ரத்து செய்யவும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அகமதிப்பெண் மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றவும், உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்," குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35% என்பதன் காரணமாகவே இவ்வாறு மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்ச்சி மதிப்பெண்ணை பொருத்தவரை அனைத்து மாணவர்களுக்கும் 35 சதவிகிதம் என்றுதான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்விதமான பாகுபாடும் இல்லை. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, நீதிபதிகள் வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்