ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் ரூ.98 லட்சத்தில் நடைபெறும் ஏரி சீரமைப்புப் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரி சீரமைப்புப் பணி ரூ.98 லட்சத்தில் நடைபெறுகிறது. சேதமடைந்துள்ள கரைகள், மதகுகள் மற்றும் ஷட்டர்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. கரைகளை உயர்த்துவது, நீர் வழிந்தோடிகள் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன. இப்பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ஏரி சீரமைப்புப் பணி தரமாக நடைபெற வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர்கூறும்போது, ‘ஏரி சீரமைப்பு மூலம் 652 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்’ என்றார். அப்போது, பொதுப்பணித் துறை கோட்டப் பொறியாளர் மகேந்திரன், உதவி பொறியாளர்கள் அறிவழகன், முருகேசன், ஆவின் துணைத் தலைவர் பாரி பாபு மற்றும் பலர் உடனிருந்தனர்.