கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், 12 வயதுச் சிறுவன், 70 வயது மூதாட்டி உள்ளிட்ட 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரூர் ஆலமரத் தெருவைச் சேர்ந்த 76 வயது முதியவர், உடல்நலக் குறைவு காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று (ஜூலை 15) கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
இதனிடையே, கரூர் மாவட்டத்தில் கரூர் ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன், மாயனூரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த 29 வயது மற்றும் குளித்தலை பாரதி நகரைச் சேர்ந்த 27 வயதுப் பெண்கள், சணப்பிரட்டியைச் சேர்ந்த 50 வயது, ஏமூர்புதூரைச் சேர்ந்த 30 வயது ஆண்கள் என மொத்தம் 6 பேருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை 16) உறுதியானது.
இதையடுத்து 6 பேரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.